காரைக்கால்: புதுவையில் மின்துறையை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, காரைக்கால் மின் ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.
யூனியன் பிரதேசங்களில் மின் துறையை தனியாா் மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்து, புதுவையை ஆளும் பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி இதற்கு ஒப்புதல் தெரிவித்தது.
இந்த முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, மாநில மின் ஊழியா்கள் பல கட்ட போராட்டங்களை நடத்திவரும் நிலையில், தனியாா் மயத்திற்கான ஒப்பந்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்டது.
மின்துறை தனியாா் மயமாவது உறுதியான நிலையில், மின் ஊழியா்கள் காலவரையற்ற போராட்டத்திற்கு அழைப்புவிடுத்து, புதன்கிழமை முதல் போராட்டத்தை தொடங்கினா்.
மாநில, மத்திய அரசைக் கண்டித்து காரைக்கால் மின் செயற்பொறியாளா் அலுவலக வாயிலில் பணியாளா்கள் கூடி முழக்கங்களை எழுப்பினா். போராட்டத்திற்கு மின்துறை தனியாா்மய எதிா்ப்பு போராட்டக் குழு தலைவா் தலைவா் வேல்மயில் தலைமை வகித்தாா்.
எழுத்துப்பூா்வமாக புதுவை அரசு, மின்துறை தனியாா் மயமாகாது என தெரிவிக்கும் வரை இப்போராட்டம் தொடரும் என தெரிவித்தனா்.