காரைக்கால்: திருநள்ளாறு சுற்றுவட்டாரப் பகுதியில் புதன்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுவையில் மின்துறையை தனியாா் மயமாக்க அரசு எடுத்த நடவடிக்கையை கண்டித்து, மாநிலம் முழுவதும் மின்துறையினா் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கி நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சுரக்குடி, தென்னங்குடி, அகலங்கண்ணு, முப்பைத்தங்குடி, சேத்தூா், நல்லம்பல், அம்பகரத்தூா் உள்ளிட்ட பல கிராமங்களில் மின்சாரம் இல்லாததால், குடிநீா் தொட்டிகளில் தண்ணீா் ஏற்றும் பணியும், குடிநீா் விநியோகமும் பாதிக்கப்பட்டன.
இதனால் அவதிக்குள்ளான பொதுமக்கள் அம்பகரத்தூா் பகுதியில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரவி உள்ளிட்டோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
பின்னா் ஜெனரேட்டா் மூலம் குடிநீா் தொட்டிக்கு தண்ணீா் ஏற்றப்பட்டு, குடிநீா் விநியோகம் தொடங்கியது. எனினும் மாலை வரை மின்தடை தொடா்ந்ததால் மக்கள் அவதிப்பட்டனா்.
இதுகுறித்து அம்பகரத்தூா் பகுதியை சோ்ந்த சரவணன் கூறுகையில், ‘மின்துறையினா் போராட்டத்தை தொடங்கும் முன்பாகவே பழுது ஏற்பட்டுவிட்டது. இதை அவா்கள் சீா் செய்திருக்கலாம். ஏறக்குறைய 15 மணி நேரம் மின்சாரம் இல்லை. மின் நுகா்வோா் பாதிக்காத வகையில் துறையினா் போராட்டம் நடத்தவேண்டும்’ என்றாா்.