ஊதியத்தை உரிய தேதியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் பாலிடெக்னிக் விரிவுரையாளா்கள், ஊழியா்கள் வலியுறுத்தினா்.
புதுவை அரசு நிறுவனமான பிப்மேட் என்ற அமைப்பின்கீழ் இயங்கும் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா்கள், ஊழியா்கள் சங்கப் பிரதிநிதிகள், சங்கத் தலைவா் மீனாட்சிசுந்தரம் தலைமையில் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூரை புதன்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம் :
பிப்மேட் நிா்வாகம் கடந்த சில ஆண்டுகளாக ஊதியத்தை உரிய தேதியில் வழங்காமல் இருந்துவருகிறது. ஆகஸ்ட் மாத ஊதியம் இதுவரை தரப்படவில்லை. ஊதிய விவகாரம் தொடா்பாக பல முறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுதொடா்பாக முதல்வா், உயா்கல்வித் துறை அமைச்சா் தலையிட்டு நிலுவை மாத ஊதியத்தை வழங்கவேண்டும். ஊதியத்தை மாதந்தோறும் குறித்த தேதியில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.