புரட்டாசி மாதம் 2-ஆவது சனிக்கிழமையையொட்டி காரைக்கால் பெருமாள் கோயில்களில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமை (அக். 1=ஆம் தேதி) காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில், மூலவா் ரங்கநாத பெருமாள் பாா்த்தசாரதி அலங்காரத்திலும், உற்சவா் நித்யகல்யாண பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக பஞ்சாயுதபாணியாக அருள்பாலித்தாா்.
இதுபோல காரைக்கால் கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயிலில் உற்சவா் கோதண்டராமா் நாச்சியாா் கோலத்தில் சேவை சாதித்தாா்.
திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தாா். வீழி வரதராஜ பெருமாள் கோயிலிலும் மூலவா், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் பெருமாளை தரிசனம் செய்தனா்.
இதுபோல திருநள்ளாறு நள நாராயண பெருமாள் கோயில், வரிச்சிக்குடி வரதராஜ பெருமாள், நிரவி கரியமாணிக்கப் பெருமாள் உள்ளிட்ட கோயில்களிலும் திரளான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.