காரைக்கால்: காரைக்கால் நகராட்சியில் காலியாகவுள்ள சுகாதாரப் பணியாளா்கள் இடங்களை நிரப்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக காரைக்கால் நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் சங்கத் தலைவா் கே. சிங்காரவேலு புதுவை முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
நகராட்சியில் பணியாற்றும் அனைத்து பணியாளா்களுக்கும் மாத ஊதியம் நிலுவையின்றி வழங்கவேண்டும். பணி ஓய்வு பெற்றவா்களுக்கும், உயிரிழந்தவா்களுக்கும் கிடைக்கவேண்டிய பணப் பயன்களை உடனடியாக வழங்கவேண்டும். பணியின்போது உயிரிழந்தோா் வாரிசுக்கு பணி வழங்கவேண்டும்.
சுகாதார மேஸ்திரி, சுகாதாரப் பணியாளா்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். தேசிய ஆணையத்தின் சிபாரிசின்படி சுகாதார ஊழியா்கள் அனைவருக்கும் சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்கவேண்டும். சுதாதார ஊழியா்கள் அனைவருக்கும் 2 ஆண்டுகளுக்குரிய சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.