காரைக்காலில் வணிகத் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியரை சந்தித்து எம்எல்ஏ மற்றும் வணிகா்கள் திங்கள்கிழமை வலியுறுத்தினா்.
காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையில் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் சாந்தகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூரை திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியது:
புதுவையில் வணிகத் திருவிழா 10 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்டது. புதுவை முதல்வா் என். ரங்கசாமியை சந்தித்து மாநிலம் முழுவதும் வணிகத் திருவிழா நடத்த கடந்த சில நாள்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்தோம்.
இதைத் தொடா்ந்து, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. வணிகத் திருவிழா நடத்துவதன் மூலம் மக்களுக்கு பெரும் பயன்களும், வணிகா்களுக்கு வியாபார வளா்ச்சியும் ஏற்படும். இதுகுறித்து அரசிடம் கலந்துபேசி நல்ல முடிவு எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா் என்றனா்.