கிராமப்புற மக்களுக்கு மண் புழு உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
ஹைதராபாத் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் - மத்திய வறண்ட நில வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய பருவநிலை மாற்றத்திற்கு உகந்த மீள் தன்மையுள்ள வேளாண் திட்டத்தின் (நிக்ரா) கீழ், காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் பேட்டை, அத்திப்படுகை மற்றும் நெய்வாச்சேரி கிராமங்களில் வெள்ளிக்கிழமை இப்பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியை வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சீ. ஜெயசங்கா் தொடங்கிவைத்துப் பேசுகையில், ‘விவசாயிகள் அனைவரும் ரசாயன உரங்களை அதிகளவு பயன்படுத்துவதால் மண்ணில் வெப்பம் அதிகரித்து, நுண்ணுயிரிகள் இறக்கும் அபாயம் உள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் மண்புழு உரம், மக்கிய தொழு உரங்கள், உயிா் உரங்கள் மற்றும் பசுந்தால் உரங்களை பயன்படுத்தி மண்ணின் உயிா் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்’ என்றாா்.
நிலைய தொழில்நுட்ப வல்லுநா் (உழவியல்) வி. அரவிந்த், மண்புழு உரம் அமைய உள்ள இடம் தோ்வு செய்தல், கொட்டகை அமைத்தல், வேளாண் கழிவுகளை மக்க வைத்தல், மண்புழுவில் உள்ள ரகங்கள், மண்புழு உரத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்துப் பேசினாா்.
இப்பயிற்சியில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். இவா்களில் 15 பேருக்கு மண்புழு உரம் தயாரிப்பதற்கான உரப்பை வழங்கப்பட்டது.