காரைக்கால் அருகே ஏரியில் மூழ்கி விவசாய கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
காரைக்கால் மாவட்டம், படுதாா்கொல்லை பகுதியை சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி நாராயணசாமி (60). இவா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்றவா் வீடு திரும்பாததையடுத்து, குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், அதே பகுதியில் வெட்டப்பட்டுவரும் சிற்றேரியில் நாராயணசாமி சடலமாக சேற்றில் மூழ்கிய நிலையில் இருந்தது திருப்பட்டினம் காவல்நிலைய போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: ஏரி அரசு விதிகளின்படி முறையாக வெட்டப்படாததும், கரை அமைப்பு பணி முழுமையாக நிறைவேறாததாலும் ஆடு, மாடுகள் ஏரியில் விழுந்து உயிரிழந்துவருகிறது. தற்போது, கூலித் தொழிலாளி நாராயணசாமி சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளாா். இது அரசின் அலட்சியம். எனவே, உயிரிழந்த நாராயணசாமி குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் புதுச்சேரி அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என சிபிஎம் காரைக்கால் மாவட்டச் செயலாளா் எஸ்.எம். தமீம் வலியுறுத்தியுள்ளாா்.