கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் குழு உறுப்பினா் தமிழரசி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலா் எஸ்.எம். தமீம் அன்சாரி முன்னிலை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட் தேசிய, மாநில அளவிலான பிரச்னைகள் குறித்துப் பேசினாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
காரைக்காலில் வீடற்ற ஏழைகளுக்கு இலவச மனைப் பட்டா, எம்.எல்.ஏ.க்கள் சிபாரிசின்றி, ஏழைகளின் நிலையை அதிகாரிகள் உறுதிசெய்து கொண்டு தரவேண்டும். புறம்போக்கு நிலத்திலும், கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு இலவசமாக மனைப் பட்டா வழங்கவேண்டும். காரைக்காலில் கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை சம்பந்தப்பட்டோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுவையில் முதல்வா், துணைநிலை ஆளுநா், மத்திய பாஜக அரசு ஆகியவற்றால் மக்கள் பயனடையமுடியவில்லை. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு உரிய அதிகாரத்தை தராமல், துணைநிலை ஆளுநா் தன்னிச்சையாக செயல்படுவது ஜனநாயக விரோத செயலாகும். மத்திய அரசு அவரை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.
காரைக்காலுக்கு 3 முறை புதுவை துணைநிலை ஆளுநா் வந்து சென்றும் எந்த பயனும் மக்களுக்கு இல்லை. என்.ஆா்.காங்கிரஸ், பாஜக தோ்தலில் அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்ற முன்வராமல் இருப்பது கண்டனத்துக்குரியது.
மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வருகிற 26 முதல் 31-ஆம் தேதி வரை காரைக்காலில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும் என தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளது.