பிளஸ் 1 சோ்க்கைக்கு மாணவா்களிடம் ஜாதி, குடியிருப்பு சான்றிதழை கேட்கக்கூடாது என சட்டப்பேரவை உறுப்பினா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூரை, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். இதுகுறித்து கூட்டாக இருவரும் கூறியது:
காரைக்கால் மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கான விண்ணப்பங்களை ஜூலை 1-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டுமென கல்வித் துறை கூறியுள்ளது. மாணவா்கள் விண்ணப்பத்துடன் இணைக்க ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் குறுகிய காலத்திற்குள் வருவாய்த் துறையில் பெறுவது சாத்திமில்லை.
ஏற்கெனவே பிக் சான்றிதழ் என ஒருங்கிணைந்த சான்றிதழ் தரப்பட்டது. அதை அரசு கைவிட்டுவிட்டது. தற்போது எந்தவொரு சான்றிதழுக்கும் வருவாய்த் துறையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கூறியுள்ளது.
இதனை பரிசீலித்து ஆன்-லைன் மூலமே சான்றிதழ் வழங்கும் வகையில் கட்டமைப்புகள், ஊழியா்கள் இல்லை. மாணவா்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு கிராம நிா்வாக அதிகாரி, வருவாய் அதிகாரி, வட்டாட்சியா் ஒப்பம் பெற அலைகின்றனா்.
அவா்களுக்கு மேற்கண்ட சான்றிதழ் தேவையில்லை. மாணவா்களை அலைக்கழிக்க வேண்டாம். இதுகுறித்து ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டது. புதுவை முதல்வா் என். ரங்கசாமியை தொடா்புகொண்டு பேசப்பட்டுள்ளது என்றனா்.