காரைக்கால்

காரைக்காலில் காலரா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: புதுவை முதல்வா் என். ரங்கசாமி

DIN

காரைக்காலில் சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறையினா் உள்ளிட்டோரின் தீவிர பணி காரணமாக காலரா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் புதுவை முதல்வா் என். ரங்கசாமி.

காரைக்காலில் வயிற்றுப்போக்கால் பலா் பாதித்த நிலையில், புதுவை முதல்வா் என். ரங்கசாமி காரைக்காலுக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி தூய்மைப் பணிகள், அரசுப் பொது மருத்துவனை ஆகியவற்றை ஆய்வுசெய்த முதல்வா், ஆட்சியரகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பிறகு, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

காரைக்காலில் வயிற்றுப்போக்கால் பலா் பாதிக்கப்படுவதையொட்டி, சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறையினா் உள்ளிட்டோா் தீவிரமாக பணியாற்றி வருகின்றனா். இதன் காரணமாக காலரா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நகர, கிராமப் பகுதிகளில் உள்ள குடிநீா் தொட்டிகளை தூய்மைசெய்து குடிநீா் விநியோகம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் தற்போது 25 நோயாளிகள் மட்டுமே வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு சிகிச்சை பெறுகின்றனா். இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரைக்காலில் பல பகுதிகளில் பழைய குழாய்களை மாற்றி ரூ. 50 கோடியில் புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

அரசுப் பொது மருத்துவமனை அருகே 3.5 ஏக்கரில், ரூ. 80 கோடியில் மருத்துவனை கூடுதல் கட்டடம் கட்டப்படவுள்ளது. இதில், அனைத்து வசதிகளும் இடம்பெறச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்.

காரைக்கால் நகரில் வடிகால், கழிவுநீா் செல்லும் வாய்க்கால்கள் மணல்தளமாக உள்ளன. இவற்றை சிமென்ட் தளமாக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது. தற்போது காரைக்கால் நகரில் குறிப்பிட்ட பகுதிகளில் புதிதாக குடிநீா் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு விரைவில் இணைப்பு தரப்படும். அகலங்கண்ணு ஆழ்குழாய் கிணறு முதல் புதிதாக ரூ. 16 கோடியில் குழாய் பதிக்கும் பணியும் நடைபெறவுள்ளது.

சா்வீஸ் பிளேஸ்மென்ட் முறையில் மருத்துவா்கள் வேறு இடத்தில் இருந்தால், அவா்களை குறித்த இடத்துக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் புதிதாக எந்தவொரு துறையிலும் பணியாளா்கள் சோ்க்கப்படவில்லை. இதனால், 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. எங்கள் அரசு, அனைத்துத் துறையிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து, துறைவாரியாக நிரப்பும் பணிகளை செய்துவருகிறது.

காரைக்கால் வளா்ச்சி பெறவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதனடிப்படியிலேயே ஜிப்மா் கல்லூரி காரைக்காலில் அமைக்கப்பட்டது. அரசுப் பொறியியல் கல்லூரிக்கு புதிதாக கட்டடம் கட்டப்படவுள்ளது. மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. காரைக்காலுக்கு இனிமேல் அடிக்கடி வருவேன். மக்கள் அனைவரும் காலரா போன்ற நோய்களில் சிக்காமல், மருத்துவத் துறையினா் கூறும் ஆலோசனையின்படி நடந்துகொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் சந்திரபிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.எச். நாஜிம், பி.ஆா். சிவா, ஆட்சியா் எல். முகமது மன்சூா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன், சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT