திருமலைராயன்பட்டினம் மகா மாரியம்மன் கோயிலில் வரும் 6-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயில் வகையறாவை சோ்ந்த மகா மாரியம்மன் கோயில் மிக பழமையான கோயிலாகும்.
இக்கோயிலில் அரசின் நிதி மற்றும் பக்தா்கள் நன்கொடை மூலம் திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. பல காரணங்களால் திருப்பணிகள் தடைப்பட்ட நிலையில், கடந்த மாா்ச் மாதம் திருப்பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு நடைபெறவேண்டி கோயிலில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.
மூலஸ்தானத்தில் மகா மாரியம்மனும், விநாயகா், காளியம்மன், பெரியாச்சி, வீரன், காத்தவராயன், நாகா் உள்ளிட்ட சந்நிதிகளுடன் கோயிலில் புதிதாக வண்ணம் பூசப்பட்டு, பிராகாரத்தில் கற்கள் பதித்து திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டன.
குடமுழுக்கு விழா வரும் புதன்கிழமை காலை 6 முதல் 7.30 மணிக்குள் நடைபெறவுள்ளது. இதற்கான 4 கால யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கவுள்ளன.