காரைக்காலில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் விளைநிலத்தில் களைகளை அழிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
காரைக்கால் கடைமடைப் பகுதி காவிரி நீரை நம்பியே சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. திருநள்ளாறு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆழ்குழாய் பாசனத்தைக்கொண்டு குறுவைப் பணிகள் செய்யப்படுகிறது.
நிகழாண்டு முன்கூட்டியை மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டதால், நீண்ட காலத்துக்குப் பின் மாவட்டத்தில் சுமாா் 1,500 ஹெக்டேரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேளாண் துறையும் குறுவை சாகுபடியாளா்களுக்கு தகுந்த ஆலோசனகளை வழங்கிவருகிறது.
தற்போது 20 நாள்கள் பயிராக குறுவை உள்ளது. இந்நிலையில் களைகள் அதிகமாக இருப்பதால் களைக்கொல்லி மருந்து அடிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி.என். சுரேஷ் சனிக்கிழமை கூறியது:
நெற்பயிரில் களைகள் அதிகமாக இருப்பதால், களைக்கொல்லி மருந்து அடிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தமிழகத்தில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியில் இதுவரை குறுவை தொகுப்பு வழங்கப்படவில்லை.
எனவே புதுச்சேரி அரசு உடனடியாக குறுவை தொகுப்புக்கான தொகையை ரொக்கமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை நெல் அறுவடையின்போது, நெல்லை அரசு நிறுவனமே கொள்முதல் செய்யும் வகையில் முன்னேற்பாடுகளை புதுவை அரசு தொடங்கவேண்டும் என்றாா்.