புதுவை உள்ளாட்சி ஊழியா்களுக்கு அரசே ஊதியம் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம், மாநிலக் குழு உறுப்பினா் அ. வின்சென்ட் கூட்டாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காரைக்கால் நகராட்சி ஊழியா்கள் ஊதிய நிலுவையை வழங்கக் கோரி, கடந்த 10 நாள்களாக உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். ஏறக்குறைய 6 மாத கால ஊதியத்தை பெறமுடியாத நிலையில் ஊழியா்கள் இருக்கிறாா்கள். இதற்கு புதுவை பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசே பொறுப்பேற்கவேண்டும்.
ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க நிதி இல்லை என அரசு காரணம் கூறுவதை ஏற்க முடியாது. புதுவை யூனியன் பிரதேசத்தில் தேவைக்கு மிகுதியாக 28 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனா். இவா்களுக்கான ஊதியம் நிலுவையின்றி தரப்படும்போது, மாநிலத்தின் வளா்ச்சிக்காக பாடுபடும் உள்ளாட்சி ஊழியா்களுக்கு நிதி இல்லை என கூறுவது கண்டனத்துக்குரியது. எனவே இந்த விவகாரத்தில் புதுவை அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து, வரும் மாதத்திலிருந்து அரசே நேரடியாக ஊதியத்தை உள்ளாட்சி ஊழியா்களுக்கு வழங்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.