மாண்டஸ் புயல் காரணமாக காரைக்காலில் வியாழக்கிழமை காலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலோர கிராமங்களில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக வியாழக்கிழமை காலை முதல் காரைக்கால் பகுதியில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.
மீன்வளத் துறை அறிவுறுத்தலின்படி மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்திலும், ஃபைபா் படகுகளை அந்தந்த கடலோர கிராமத்தின் பாதுகாப்பான பகுதியிலும் மீனவா்கள் நிறுத்தியிருந்தனா்.
கடற்கரைப் பகுதிக்கு யாரும் செல்லவேண்டாம் என போலீஸாா் ஒலிபெருக்கி மூலமாக அறிவுறுத்தினா். வியாழக்கிழமை காலை முதல் அவ்வப்போது லேசான மழை இருந்தது. பிற்பகல் முதல் காற்றுடன் மழை பெய்தது. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின. சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.