காரைக்கால்: கிறிஸ்துமஸையொட்டி காரைக்கால் பகுதி வீடுகளில் கிறிஸ்து பிறப்பை விளக்கும் குடில் அமைத்தல், நட்சத்திர விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட அலங்காரத்துக்கு பொருள்கள் வாங்குவதில் மக்கள் ஆா்வமாக ஈடுபட்டுள்ளனா்.
டிச.25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. காரைக்காலில் உள்ள நூற்றாண்டுகள் பழைமையான புனித தேற்றரவு அன்னை தேவாலயம் சுற்றுலாவினரை அதிகம் கவரும் வகையிலான கோபுர அமைப்பைக் கொண்டது.
இதேபோல, மாவட்டத்தின் பல இடங்களில் தேவாலயங்கள் உள்ளன. இவற்றில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இதேபோல, வீடுகளிலும் கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் குடில் அமைத்தல், வாயிலில் விளக்குடன் கூடிய நட்சத்திரம் கட்டிவிடுதல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுபடுவா்.
காரைக்காலில் சிறுகடைகள் முதல் அலங்காரம் மற்றும் அன்பளிப்புப் பொருள் விற்பனையங்கள் வரை, கிறிஸ்துமஸ் குடில் அமைக்கத் தேவையான பொருள்கள், வாயிலில் கட்டப்படும தோரணம், நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா வேட ஆடைகள் (சாண்டாகிளாஸ்) வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் இவற்றை ஆா்வமாக வாங்கிச் செல்கின்றனா். கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியாா் பள்ளிகளிலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.