காரைக்கால் கடல் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்ததில் மீனவா் மாயமானாா்.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதி பட்டினச்சேரி மீனவ கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டனுக்குச் சொந்தமான ஃபைபா் படலில் அவரும், சிவா (27) என்பவரும் திங்கள்கிழமை அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்தது. இதனால், இருவரும் கடலில் தத்தளித்தனா். அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த சக மீனவா்கள் மணிகண்டனை மீட்டனா். சிவா நீரில் மூழ்கி மாயமானாா்.
இதுகுறித்து உள்ளூா் மீனவா்கள் மூலம் தீயணைப்புத் துறையினா், போலீஸாா் மற்றும் கடலோரக் காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், மீனவா்கள் தங்களது படகில் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனா். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
நிரவி- திருப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் கடற்கரைக்குச் சென்று சிவாவை தேடும் பணியை தீவிரப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினரை அறிவுறுத்தினாா்.