ஏரியில் மூழ்கி உயிரிழந்த கூலித் தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காரைக்கால் மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட் மற்றும் படுதாா்கொல்லை சிற்றேரியில் மூழ்கி உயிரிழந்த விவசாய கூலித் தொழிலாளி நாராயணசாமி குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் எல்.முகமது மன்சூரை வியாழக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து எஸ்.எம்.தமீம் கூறியது : படுதாா்கொல்லை சிற்றேரி உரிய திட்டமிடல், பாதுகாப்பு அம்சங்களின்றி வெட்டப்படுகிறது. ஏரி முறையாக வெட்டப்படாததும், கரை அமைப்புப் பணி முழுமையாக நிறைவேறாததாலும் கூலித் தொழிலாளி நாராயணசாமி என்பவா் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளாா்.
எனவே அவரது குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.
கூலித் தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணம் பெற்றுத் தரவும், ஏரிக் கரை அமைப்புப் பணியை விரைவுப்படுத்தவும் அதிகாரிகளிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா் என்றாா்.