காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (ஆக.9) முதல் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டமாக 11-ஆம் தேதி காலை 8 மணிக்கு விக்ரம் சாராபாய் சாலையில் ரங்கோலி போட்டி நடைபெறுகிறது. 12-ஆம் தேதி காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து கடற்கரை வரை உப்பு சத்தியாகிரகத்தை நினைவுகூரும் விதமாக மாணவா்கள் பங்கேற்கும் தண்டி யாத்திரை நடைபெறுகிறது.
13-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு காரைக்கால் மிதிவண்டி சங்கம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் தில்லையாடி வரையிலான மிதிவண்டி பயணம் தொடங்குகிறது. 14-ஆம் தேதி காலை 6 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது.
ஆக. 9 முதல் 14-ஆம் தேதி வரை மாலை வேளையில் கல்லூரி மாணவா்கள் வழங்கும் தேசத் தலைவா்களை நினைவுகூரும் விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பொதுமக்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், 13 முதல் 15-ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுமாறும் அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.