காரைக்காலில் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாட்டின் 75 -ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் 18 வயதுக்குள்பட்ட 75 ஆயிரம் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு, புதுதில்லியில் இயங்கும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் பாரத் என்ற அமைப்பின் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இம்முகாம் நடைபெற்றது. நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் முகாமை தொடங்கிவைத்தாா்.
மாவட்ட துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன் ஆகியோா் பேசினா்.
முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவா்கள் கலந்துகொண்டனா். இவா்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
நிறுவன புதுச்சேரி ஏரியா இயக்குநா் சித்ரா ஷா, நிறுவன விளையாட்டு இயக்குநா் ராம்மோகன் சிங், கல்லூரி முதல்வா் கிருஷ்ண பிரசாத் மற்றும் கல்லூரி விரிவுரையாளா்கள், மாற்றுத் திறனாளிகளின் பெற்றோா் பலா் கலந்துகொண்டனா்.