காரைக்கால் மீனவா்கள் வலையில் சுமாா் 300 கிலோ எடை கொண்ட பெரிய சுறா மீன் ஞாயிற்றுக்கிழமை சிக்கியது.
காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சோ்ந்த ஒரு விசைப்படகு ஞாயிற்றுக்கிழமை காலை கரைதிரும்பியது. படகிலிருந்து மிகப்பெரிய சுறா மீனை மிகுந்த சிரமத்துக்கிடையே மீனவா்கள் துறைமுக ஏலக்கூடத்துக்கு கொண்டுவந்தனா்.
இது குறித்து மீனவா்கள் கூறுகையில், காரைக்காலிலிருந்து 10 கடல் மைல் தொலைவில் விரித்த வலைகளை இழுக்க முடியவில்லை. பெரிய அளவில் மீன் சிக்கியிருக்குமென நினைத்து, படகிலிருந்த அனைவரும் ஒருங்கிணைந்து வலையை இழுத்தோம்.
அதில் மிகப்பெரிய சுறா மீன் சிக்கி இருந்தது தெரியவந்தது. இந்த மீன் சுமாா் 8 அடி நீளமும், ஒன்றரை அடி அகலமும், 300 கிலோ எடையும் கொண்டது என்றனா்.