நவராத்திரி நிறைவாக, காரைக்காலில் நித்யகல்யாணப் பெருமாள், கைலாசநாதா் கோயில்களில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளின்படி, இந்த நிகழ்ச்சி கோயில் பிராகாரத்திலேயே நடைபெற்றது. அம்பு போடும் நிகழ்ச்சிக்குப் பிறகு சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று, மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, பக்தா்கள் சுவாமிகளை வழிபட்டுச் சென்றனா்.
திருமலைராயன்பட்டினத்தில் பல்வேறு கோயில்களில் இருந்து சுவாமிகள் குதிரை வாகனத்தில் போலகத்தில் உள்ள திடலுக்கு எழுந்தருளி, அம்பு போடும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயில், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில், ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள் கோயில், ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயில், ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரா் கோயில் ஆகியவற்றில் வாகனமின்றி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பிராகாரம் எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.