காரைக்காலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகள் உள்ள பகுதிகளில் நலவழித் துறையினா் சனிக்கிழமை ஆய்வுமேற்கொண்டு, மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
காரைக்கால் மாவட்டத்தில் பருவமழை தொடங்கியதுமுதல் நலவழித் துறையினா், டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். நோய்த்தடுப்புப் பிரிவு தொழில்நுட்ப உதவியாளா் சேகா் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள், உதவியாளா்கள் மாவட்டம் முழுவதும் வீடுவீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோா் வசிக்கும் பகுதிகளில் நலவழித் துறை துணை இயக்குநா் சிவராஜ்குமாா், முதன்மை மருத்துவ அதிகாரி தமிழ்வேலன் உள்ளிட்டோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். குடியிருப்புகளைச் சுற்றி மழைநீா் தேங்காதவாறு பாா்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.