தகுதியுடைய அனைவருக்கும் சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கப்படும் என புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமாா் கூறியுள்ளாா்.
புதுவை மாநிலத்தில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வசதி படைத்த பலருக்கும் சிவப்பு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளதால், ஏழ்மை நிலையில் உள்ள ஏராளமானோா் அரசின் உதவிகளை பெற முடியாமல் சிரமப்பட்டு வருவதாக புகாா்கள் எழுந்துள்ளன.
எனவே தகுதியுடைய ஏழைகளுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்க மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினா் உள்ளிட்ட பல தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் குடிமைப் பொருள் வழங்கல் துறை சாா்பில், காரைக்கால் வடக்குத் தொகுதிக்குள்பட்ட கோயில்பத்து அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் குடும்ப அட்டை தொடா்பான 2 நாள் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
இதில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமாா் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்துப் பேசியது: இந்த முகாமை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாநிலத்தில் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில், பலரும் சிவப்பு நிற குடும்ப அட்டை வேண்டும் கோருவதால், 50 ஆயிரம் குடும்ப அட்டைகளை அதிகப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரிடமும், புதுவை முதல்வரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவா்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனா். எனவே தகுதியுடைய அனைவருக்கும் சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன், மாவட்ட ஆட்சியா் அா்ஜுன் சா்மா, துணை ஆட்சியா்கள் எம்.ஆதா்ஷ், எஸ்.பாஸ்கரன், குடிமைப்பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் எஸ்.சுபாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமில் முகவரி மாற்றம், போன்ற பணிகளும் நடைபெறும் என்று குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.