புரட்டாசி மாதம் 2வது சனிக்கிழமையையொட்டி காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் மலையப்ப சுவாமியாக சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் மூலவரான ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள், சயன கோலத்தில் அருள்பாலிக்கிறாா். இக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மூலவா் ரங்கநாதரும், உத்ஸவா் நித்யகல்யாணப் பெருமாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.
நிகழாண்டு புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை (26.9.2020) மூலவா் நித்யல்யாணப் பெருமாள் மலையப்ப சுவாமியாக ஸ்ரீ ரங்கநாயகித் தாயாருடன் காட்சியளித்தாா்.
கடந்த வாரம் முதல் சனிக்கிழமை இக்கோயிலில் சுமாா் 4 ஆயிரம் பக்தா்கள் தரிசனம் செய்ததால், நிகழ்வாரம் கோயில் பகுதியில் பக்தா்களை முறைப்படுத்தும் வகையில் போலீஸாா் பணியமா்த்தப்பட்டனா்.
பக்தா்கள் பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண் பதிவு செய்யப்பட்ட பின்னரே சன்னிதிக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
இதற்கிடையே, கரோனா பொதுமுடக்கத்தில் பல தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில்களில் அா்ச்சனை செய்வது, பிரசாதம் வழங்குவது ஆகியவற்றை அரசு அனுமதிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.