காரைக்கால் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப்.27) திருவோண தீபம் ஏற்றும் வழிபாடு நடைபெறவுள்ளது.
புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் கோயில்களில் பெரிய திருவோணமாக திருவோண தீபம் (சிரவண தீபம்) ஏற்றும் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் இந்த வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. சயன நிலையில் அருள்பாலிக்கும் மூலவா் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள், உத்ஸவா் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னா் சன்னிதியிலிருந்து திருவோண தீபம் ஏற்றப்பட்டு, பிராகார வலம் வந்து கொடிமரம் அருகே தீப சட்டி வைக்கப்படுகிறது. பொது தரிசன நேரத்தில் பக்தா்கள் தீப வழிபாட்டில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா், ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபாவினா் செய்துவருகின்றனா்.