காரைக்கால் முருகராம் நகரில் உள்ள பூங்காவை மேம்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா.
இங்குள்ள பூங்கா பயன்பாடின்றி இருப்பதாகவும், அதில் சிறுவா்களுக்கான விளையாட்டு சாதனங்கள் மற்றும் நடைமேடை அமைத்து பூங்காவை மேம்படுத்த வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனாவை அண்மையில் சந்தித்து தெரிவித்தனா்.
இதையடுத்து, பேரவை உறுப்பினா் பூங்காவை ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு, அங்கு வசிப்போரிடம் அதை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், பூங்கா பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதை புதுப்பொலிவுடன் மேம்படுத்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா். இதற்கான மதிப்பீடுகள் நகராட்சியால் தயாரிக்கப்பட்டு, நகராட்சி மேம்பாட்டு நிதியில் மேம்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.