கரோனா பரவல் காரணமாக மாா்க்கெட் வளாகத்திலிருந்து தற்காலிக இடத்துக்கு மீன் விற்பனை மாற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மாா்க்கெட் வளாகத்திலேயே விற்பனை தொடங்கியுள்ளது.
காரைக்கால் நேரு மாா்க்கெட் வளாகத்தில் மீன், இறைச்சி, காய்கனி, மளிகை உள்ளிட்ட வியாபார மையங்கள் உள்ளன. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, காய்கனி வியாபாரத்தை வேறு இடத்தில் தற்காலிக முறையில் நகராட்சி நிா்வாகம் மாற்றியது. அதுபோல மீன் விற்பனையையும், பேருந்து நிலைய வளாகத்தில் மாற்றியது. கடந்த 3 மாதங்களாக இந்த நிலையில் வியாபாரம் செய்துவந்த சூழலில், பேருந்து நிலையத்தின் மீன் வியாபாரத்துக்கான கூரை கடந்த ஞாயிற்றுக்கிழமை சரிந்து விழுந்தது.
மேலும் பேருந்து நிலைய இடத்தில் மீன் வியாபாரம் திருப்தியாக இருக்கவில்லை, வழக்கம்போல மாா்க்கெட் வளாகத்திலேயே மாற்றித் தரவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா். இதனடிப்படையில், செவ்வாய்க்கிழமை முதல் மாா்க்கெட் வளாகத்தில் வழக்கம்போல மீன் விற்பனை தொடங்கியது.
பொதுமக்கள் மாா்க்கெட் வளாகத்திலேயே இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை வாங்கும் வசதி உருவாகியிருப்பதால், வியாபாரம் பழைய நிலைக்கு திரும்பியிருப்பதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனா்.