சூரிய கிரகண நாளான வியாழக்கிழமை (டிசம்பா் 26) திருநள்ளாறு கோயிலில் வழக்கம்போல தரிசனம் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியாா்கள் சேவா சங்கத் துணைத் தலைவரும், திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயில் அா்ச்சகருமான டி. ராஜா சுவாமிநாத சிவாச்சாரியாா் புதன்கிழமை கூறியது :
பொதுவாக எந்தவொரு கிரகண நாளிலும் திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயில் நடை மூடப்படுவதில்லை. இக்கோயிலில் உள்ள சனீஸ்வரபகவான் அனுகிரஹ மூா்த்தியாக அருள்பாலிக்கிறாா். தா்பாரண்யேசுவரா் கிரகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவா்.
கிரகண நேரத்தில் சுவாமிகளைக் கோயிலில் வழிபாடு செய்யும்போது, குறிப்பாக ஜபங்கள் யாவும் பன்மடங்கு பலனைத் தரும். கிரகண நேரம் என்பது புண்ணிய காலமாகும். இந்த நேரத்தில் திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா், தியாகராஜா், பிரணாம்பிகை, சனீஸ்வரா் உள்ளிட்டோரை வழிபடுவது பெரும் பயனையே தரும். எனவே கோயில் காலை 5 முதல் பகல் 1 மணி வரை என வழக்கமான நேரத்தில் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் கோயில் மூடப்பட்டிருக்கும் என்று திருநள்ளாறு கோயிலைப் பொருத்தவரை குழப்பம் கொள்ளத் தேவையில்லை என்றாா் அவா்.