திருமலைராயன்பட்டினம் ஏகாம்புரீசுவரர் கோயில் திருப்பணிக்கு அரசு நிதியுதவி செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி முதல்வரிடம் திருப்பணிக் குழுவினர் வியாழக்கிழமை வலியுறுத்தினர்.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட காமாட்சி அம்மன் சமேத ஏகாம்புரீசுவரர் கோயில் உள்ளது. இக்கோயில் 100 ஆண்டுகளுக்கு முற்பட்டது. திருப்பணி நடைபெற்று 14 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், புதிதாக மண்டபம், சன்னிதிகள் எழுப்பி குடமுழுக்கு செய்ய அறங்காவல் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக திருப்பணிக் குழுவினரும் நியமிக்கப்பட்டனர். ஏறக்குறைய ரூ.28 லட்சம் மதிப்பில் திருப்பணி செய்ய திட்டமிட்டு கடந்த ஓராண்டுக்கு முன் பணிகள் தொடங்கப்பட்டன. போதிய நிதியாதாரம் இல்லாததால் திருப்பணிகள் மந்தகதியில் நடைபெறுகின்றன. பிரசித்திப் பெற்ற தலமாக விளங்குவதால், பக்தர்கள் தாராளமாக நிதியுதவி செய்ய முன்வருமாறு திருப்பணிக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தநிலையில், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் தலைமையில், திருப்பணிக் குழுத் தலைவர் சிவக்குமார், செயலாளர் பக்கிரிசாமி மற்றும் ரத்தினவேலு உள்ளிட்ட குழுவினர் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமியை புதுச்சேரியில் வியாழக்கிழமை சந்தித்து, திருப்பணி விவரங்களையும், தேவையான நிதி குறித்தும் தெரிவித்தனர். இந்த சந்திப்பு குறித்து காரைக்கால் திரும்பிய திருப்பணிக் குழுவினர் கூறும்போது, திருப்பணிக்கான நிதி குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறப்பட்டது. முதல் தவணையாக ரூ.2 லட்சம் தருவதற்கு ஏற்பாடு செய்வதாகவும், திருப்பணி விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரை சந்தித்து எழுத்துபூர்வமாக தருமாறும் கூறினார். இதன்படி ஆணையரிடம் விவரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றனர்.