மீனவர்களுக்கு 3 நாள்கள் நடைபெற்றுவந்த டீசல் என்ஜின் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சி சனிக்கிழமை நிறைவடைந்தது.
புதுச்சேரி அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை, பூம்புகாரில் உள்ள ம.சா. சுவாமிநாதன் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில், உலக வங்கி பிம்சூல் திட்டத்தின் மூலம் சிறு படகு மீனவர்களுக்கு டீசல் என்ஜின் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கலுக்கான 3 நாள் பயிற்சி முகாம் திருப்பட்டினம் மீனவ கிராம சமுதாய கூடத்தில் நடைபெற்றுவந்தது. இப்பயிற்சி சனிக்கிழமை நிறைவடைந்தது. தொடக்க நாளில் இப்பயிற்சியை இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மைய கமாண்டன்ட் த. நாகேந்திரன் தொடங்கிவைத்து, மீனவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த பயிற்சியில் மீனவர்களுக்கு 10 எச்பி திறன் கொண்ட என்ஜின் பாகங்களை கழற்றி, மீண்டும் பொருத்தும் வகையிலான பயிற்சியும், என்ஜினில் எந்தெந்த பாகங்கள் பழுதாகும், எதனால் பழுதாகும் என்பதை தெரிவித்து, அதனை சீரமைக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சியாளர் வீரமுத்து இப்பயிற்சியை அளித்தார்.
நிறைவு நிகழ்ச்சியில், காரைக்கால் மீன்வளத்துறை துணை இயக்குநர் கவியரசன் பங்கேற்றுப் பேசும்போது, "கடலில் பழுதாகி நிற்கும் என்ஜினை தாமே சுயமாக பழுது நீக்கும் வகையில் மீனவர்கள் திறனை வளர்த்துகொள்ளவேண்டும். இதுபோன்ற அமைப்புகள் அதற்கு ஆதரவாக இருக்கவேண்டும்' என அவர் கேட்டுக்கொண்டார்.
ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ந.வேல்விழி, கிராம பஞ்சாயத்தார்கள் ஆனந்த், சுபாஷ்சந்திரபோஸ், ஐயப்பன், முத்துமணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.