தலத்தெரு தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதி உத்ஸவம் திங்கள்கிழமை (ஏப். 29) நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்டம், தலத்தெரு பகுதியில் அமைந்துள்ள சிவலோகநாதசுவாமி தேவஸ்தானத்தைச் சார்ந்த ஸ்ரீ தங்க மாரியம்மன் கோயில், காரைக்கால் பகுதியில் பிரசித்திப் பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. கடந்த 21-ஆம் தேதி தீமிதி உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் அம்மனுக்கு அபிஷேகமும், இரவு நேரத்தில் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்வான தீமிதி வைபவம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, காலை 8 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெறுகின்றன. முன்னதாக, பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு அலகுக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்துவந்து அம்மனை வழிபடுவர்.
மாலை 5 மணியளவில் அம்மன் அன்ன வாகனத்தில் தீக்குழி அருகே எழுந்தருளச் செய்யப்பட்டு, கரகம் முதலாவதாகவும், பின்னர் பக்தர்கள் ஒவ்வொருவராகவும் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.