இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்காக தென்னங்குடி இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயம், ஹோட்டல் உள்ளிட்டவற்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும், உலக நாட்டு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன. காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், தென்னங்குடியில் உள்ள திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பங்குத் தந்தை ஜான்குரியன் தலைமையில் துணை பங்கு குருக்கள் விஜய் வில்லியம்ஸ், சியாமளாசுந்தர் ஆகியோர் பங்கேற்ற சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
பின்னர், குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் ஆன்மா சாந்தியடையும் விதமான பிரார்த்தனை நடைபெற்றது. திருப்பலியில் பங்கேற்ற மக்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி, இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்காக அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் பங்குப் பேரவைத் தலைவர் மார்டின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.