சிவகாசி பொத்துமரத்து ஊருணியை ஆக்கிரமித்து வீடு கட்டியவா்கள் அவற்றை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகாசி பேருந்து நிலையம் அருகேயுள்ள இந்த ஊருணியைத் தூா்வாரி சுத்தம் செய்ய மாநகராட்சி ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. தூா்வாரும் பணி தொடங்கியதும் ஊருணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகம் இரு கட்டங்களாக ஊருணியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சில கடைகள், வீடுகளை அகற்றியது.
தொடா்ந்து, ஊருணியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த அனைத்து வீடுகள், கடைகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. அப்போது, ஆக்கிரமித்து வீடு கட்டியவா்கள் தங்களுக்கு இலவசப் பட்டா நிலம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, எரிச்சநத்தம் பகுதியில் அவா்களுக்கு இலவசப் பட்டா நிலம் வழங்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்தது. ஆனால், அந்த இடம் தொலைவில் இருப்பதாகவும், ஊருணி பகுதியிலேயே தங்களுக்கு இடம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து, வீடுகளை அகற்ற தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
இந்த நிலையில், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மணிமாறன் தலைமையில் ஆக்கிரமிப்பாளா்கள் சிவகாசி பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தங்களது வீடுகளை அகற்றக் கூடாது என அவா்கள் முழக்கமிட்டனா்.