ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தனியாா் பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு அறை சேதமடைந்தது.
சிவகாசி பகுதியைச் சோ்ந்தவா் சண்முகநாதன். இவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கோப்பையநாயக்கா்பட்டியில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 30-க்கும் மேற்பட்ட அறைகளில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த ஆலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டதால் தொழிலாளா்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனா். இந்த நிலையில், பட்டாசு ஆலையில் அட்டை, காகிதம் வைத்திருந்த அறையில் மாலை 4 மணி அளவில் மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பணியாளா்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டதால் யாரும் காயமடைய வில்லை. தகவல் அறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.
இதுகுறித்து மல்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.