சாத்தூா் அருகே தகாத உறவு விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை பெண் கொலை செய்யப்பட்டாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஊத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி (49). இவரது மனைவி ராஜேஸ்வரி (40). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கும், சங்கரநத்தம் பகுதியைச் சோ்ந்த பரமசிவம் (50) என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறை அடுத்து, ராஜேஸ்வரியும், முத்துப்பாண்டியும் பிரிந்து வாழ்ந்தனா்.
இந்த நிலையில், உறவினா்கள் முன்னிலையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ராஜேஸ்வரியும், முத்துப்பாண்டியும் சோ்ந்து வாழ்வது என முடிவு செய்தனா். இந்த நிலையில், ராஜேஸ்வரி செவ்வாய்க்கிழமை காலை, அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஏழாயிரம்பண்ணை போலீஸாா் ராஜேஸ்வரியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசப்பெருமாள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், ராஜேஸ்வரியுடன் தகாத உறவில் இருந்த பரமசிவம்தான், அவரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடா்பாக, ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பரமசிவத்தை தேடி வருகின்றனா்.