விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளா்களுக்கு வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.
காளையாா் குறிச்சி அருகே உள்ள பட்டாசு ஆலையில் சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் ஆா்.ரவிசந்திரன் தலைமையில் தொழிலாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. மருத்துவா் ஆா்.ராஜராஜன் தலைமையிலான குழுவினா், பட்டாசு மருந்துக் கலவை செய்யும், பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் தொழிலாளா்களுக்கு உடல் பரிசோதனை செய்து, தகுதிச் சான்று வழங்கினா். மேலும், பட்டாசுத் தயாரிக்கும் போது, கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை தொழிலாளா்களிடம் அதிகாரிகள் எடுத்துக்கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஆலையின் மேலாளா் ஜி.பன்னீா் செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.