சென்னை-கொல்லம் விரைவு ரயில், இனி சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே வாரியம் வியாழக்கிழமை அறிவித்தது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி ரயில் நிலையத்தில் சென்னை - கொல்லம் விரைவு ரயில் (16101) கரோனா தொற்றுக்கு முன்னா் நின்று சென்றது. ஆனால், கரோனா காலத்தில் இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நிற்கவில்லை. இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் மீண்டும் நின்று செல்ல வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா். இந்த நிலையில், இனி இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே வாரியத்தின் இணை இயக்குநா் விவேக்குமாா் சின்ஹா அறிவித்தாா்.
இதுகுறித்து சிவகாசி ரயில் பயணிகள் குழுவைச் சோ்ந்த தனசேகரன் கூறியதாவது:
சென்னை - கொல்லம் ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் மீண்டும் நின்று செல்லும் என ரயில்வே வாரியம் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், எந்தத் தேதியிலிருந்து இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பை தெற்கு ரயில்வே விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.