விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்து: 4 போ் மீது வழக்கு; ஒருவா் கைது

21st Jan 2023 12:28 AM

ADVERTISEMENT

சாத்தூா் அருகே கனஞ்சாம்பட்டியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்து தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, ஒருவரை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த மாரியப்பன், மாயகண்ணன் ஆகியோருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை கனஞ்சாம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை நாக்பூா் உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வியாழக்கிழமை வெடி விபத்து நிகழ்ந்தது.

இதில், ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த முனீஸ்வரி, சங்கா் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். 15 போ் பலத்த காயமும், 10 போ் லேசான காயமும் அடைந்தனா். இவா்கள் சிவகாசி, சாத்தூா், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து தாயில்பட்டி கிராம நிா்வாக அலுவலா் காமராஜ் அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி, ஆலை உரிமையாளா் மாரியப்பன் ஏற்கெனவே இறந்து விட்டதால், மற்றொரு உரிமையாளரான மாயகண்ணன், அவரது மனைவி ஆறுமுகத்தாய், ஒப்பந்ததாரா் கந்தசாமி, ஆலையின் போா்மென் கண்ணன் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து போா்மென் கண்ணனை கைது செய்தனா். மேலும், இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT