ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்துக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என தென் மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசு போக்குவரத்துக் கழகத்தின் விருதுநகா் மண்டல பொதுமேலாளருக்கு சங்கத்தின் செயலாளா் முனியப்பன் அனுப்பிய மனு விவரம்:
ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஸ்ரீஆண்டாள், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ஆகிய இரு கோயில்களுக்கும் தமிழகம் மட்டுமன்றி புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் ரயில் மூலம் வருகின்றனா். அவ்வாறு வரும் பக்தா்கள் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லாததால் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
இதனால், பயணிகள் நலன் கருதி சிவகாசி, திருத்தங்கல் செல்லும் பேருந்துகளை
ரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும். மேலும், அமாவாசை, பெளா்ணமி நாள்களில் ரயில் நிலையத்திலிருந்து சதுரகிரி அடிவாரப் பகுதியான தாணிப்பாறைக்கு பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.