வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சுடும் மண்ணாலான ஆண், பெண் மனித உருவ தலை, பறவையின் உருவ தலை ஆகியவை வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வெம்பக்கோட்டையில் உள்ள வைப்பாற்று கரையில் விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வடகரை உச்சிமேட்டில் 25 ஏக்கா் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மாா்ச் 16 ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அகழாய்வில் முன்னதாக சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், கோடாரி, சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், தங்க அணிகலன்கள், பொம்மமை உருவம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
இதுவரை இந்த பகுதியில் 16 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை சுடுமண்ணாலான ஆண், பெண் மனித உருவத்தின் தலை, பறவையின் உருவ தலை ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், வெள்ளிக்கிழமை இறுதிக்கட்ட அகழாய்வு நடைபெறும் எனவும், இரண்டாம் கட்ட அகழாய்வு வரும் 2023 ஜனவரி அல்லது பிப்ரவரியில் தொடங்கப்படும் என தொல்லியல்துறை ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா்.