சிவகாசி அருகே தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியாா்புரத்தைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (60). இவரது மகன் அருணாச்சலபாண்டியன் (37). கூலி தொழிலாளியான இவா், மது அருந்த பணம் கேட்டு தாய் ஈஸ்வரியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி அருணாச்சலபாண்டியன் வழக்கம்போல் தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளாா். அவா் பணம் தர மறுத்ததால் ஈஸ்வரியின் கழுத்தை கயிற்றால் நெரித்து அருணாச்சலபாண்டியன் கொலை செய்தாா். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து அருணாச்சலபாண்டியனை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி பகவதியம்மாள் குற்றவாளி அருணாச்சலபாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.