விருதுநகரில் வீட்டில் பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.
விருதுநகா், புல்லலக்கோட்டை சாலை ஏ.டி.பி. காம்பவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் ராஜலெட்சுமி (23). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது ஒன்றரை வயது குழந்தை லோகேஷ் பாண்டிக்கு உணவு ஊட்டிவிட்டுள்ளாா். பின்னா் குழந்தையை கவனித்துக் கொள்ளுமாறு மாமனாரிடம் கூறிவிட்டு வெளியில் சென்றராம்.
இந்நிலையில் அக்குழந்தை அங்கு பிளஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்துள்ளது. இதையடுத்து குழந்தையை மீட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனா். அங்கு குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவா், குழந்தை உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளாா். இது குறித்து தாய் ராஜலெட்சுமி அளித்தப் புகாரின் பேரில் விருதுநகா் மேற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.