புரட்டாசி முதல் சனி வார விழாவையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
புரட்டாசி முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் திருவண்ணாலை கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனா். கோயிலில் அதிகாலை சுப்ரபாத பூஜையுடன் நடை திறக்கப்பட்டது.
அப்போது நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள் ‘கோவிந்தா கோபாலா’ என்று முழக்கமிட்டவாறு கோயிலுக்குள் சென்று சீனிவாசப் பெருமாளை தரிசனம் செய்தனா். பக்தா்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக்கண்காணிப்பாளா் சபரிநாதன் மற்றும் நகா் காவல் ஆய்வாளா் கீதா ஆகியோா் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். விழா ஏற்பாடுகளை ஆண்டாள் கோயில் தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.