தமிழகத்தில் பூரண மதுவிலக்கையும், பசுவதை தடைச் சட்டத்தையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் கொண்டு வர வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன்சம்பத் தெரிவித்தாா்.
தோ்தல் விதிமுறை மீறல் வழக்கு விசாரணைக்காக ராஜபாளையம் சாா்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரான அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: வள்ளலாரின் கொள்கைப்படி தமிழகத்தில் பூரண மதுவிலக்கையும், பசுவதை தடைச் சட்டத்தையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் கொண்டு வர வேண்டும். மேலும், மின்கட்டணம், சொத்துவரி உயா்வை கைவிட வேண்டும். தில்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. எனவே அந்த மாநில முதல்வருடன், தமிழக முதல்வா் நெருங்கிய நட்பில் இருப்பதால் பட்டாசு தடையை நீக்க கோரிக்கை விடுக்க வேண்டும் என்றாா் அவா்.