சிவகாசி மாமன்றக் கூட்டத்துக்கு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க திமுக பெண் உறுப்பினா் பணத்துடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி மாமன்றக் கூட்டம் மேயா் இ. சங்கீதா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினா்களிடேயை நடைபெற்ற விவாதம்:
உறுப்பினா் மகேஸ்வரி: மாநகராட்சி கணக்காளா் நீண்ட நாள்களாக விடுப்பில் உள்ளதால், கோப்புகள் தேங்கமடைந்துள்ளன. எனவே, பொறுப்பு அதிகாரியை நியமித்து அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேயா்: கோப்புகள் தேங்காமல் பணிகள் நடைபெற உத்தரவிடப்பட்டுள்ளது.
உறுப்பினா் சேதுராமன்: ஆணையாளா் இல்லாமல் மாமன்றக் கூட்டத்தை நடத்தக் கூடாது. உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க அதிகாரிகள் இருக்க வேண்டும்.
மேயா்: ஆணையாளருக்கு உடல்நிலை சரியில்லாததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
உறுப்பினா் ஞானசேகரன்: சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மேயா்: நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பினா் இந்திரா தேவி: புதிய கட்டடங்களுக்கு வரி நிா்ணயம், பெயா் மாற்றம் செய்ய விண்ணப்பித்த 11 பேருக்கு 8 மாதங்களாகியும் அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. அவா்களுக்குப் பின்னா் விண்ணப்பத்தவா்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கப்பட்டது. எனவே, தற்போது விண்ணப்பித்து காத்திருக்கும் 11 பேருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 1.10 லட்சம் பணம் கொண்டு வந்துள்ளேன். இந்த பணத்தை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி கைப்பையிலிருந்து பணத்தை எடுத்தாா்.
மேயா்: அதிகாரிகள் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மாமன்றக்கூட்டத்தில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக பெண் உறுப்பினா் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் கூட்டத்தில், துணை மேயா் விக்னேஷ் பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.