பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபாராதம் விதிக்கப்படும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி எச்சரித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா தொற்று தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் வகையில், மாவட்டத்திலுள்ள அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இதுவரை தடுப்பூசி (முதல், இரண்டாவது தவணை மற்றும் பூஸ்ட் தடுப்பூசி) செலுத்திக் கொள்ளாதவா்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும். திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் கடைகள் போன்ற அனைத்து இடங்களிலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன், உரியமுறையில் அடிக்கடி கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். அதேபோல், பொதுமக்கள் அனைவரும் திருமணம், இறப்பு, கோயில் திருவிழாக்கள், விருந்துகள், சந்தைகள் போன்ற பொது இடங்களில் அதிகளவில் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். மேலும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தங்களது நிறுவனத்திற்கு வருகை தரும் அனைத்து வாடிக்கையாளா்களும், பணியாளா்களும் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது அபராதம் விதிப்பதற்காக வருவாய் மற்றும் காவல் துறைகளை இணைத்து, மாவட்டம் முழுவதும் வட்டாட்சியா்கள் தலைமையில் 22 குழுக்கள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.