விருதுநகா் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டும் ஊதிய உயா்வு வழங்கப்படவில்லை என அவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
விருதுநகா் நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில் சுமாா் 80 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில் நகா்ப் பகுதியில் தூய்மைப் பணிகளுக்காக ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளா்கள் பணி புரிந்து வந்தனா். இந்நிலையில் பலா் ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடத்திற்கான நிரந்தர துப்புரவுப் பணியாளா்கள் நியமிக்கப்படவில்லை.
இதன் காரணமாக தற்காலிக அடிப்படையில் மகளிா் சுய உதவிக்குழு மூலம் 100 போ் துப்புரவுப் பணியாளா்களாக நியமிக்கப்பட்டனா். ஆண்டுதோறும் இவா்களுக்கு ஊதிய உயா்வு அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் துப்புரவுப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவதை, மதுரையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்திற்கு நகராட்சி நிா்வாகம் அனுமதி அளித்தது.
கடந்தாண்டு டிசம்பா் மாதத்துடன் ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், துப்புரவு பணியாளா்களுக்கு தினமும் ரூ. 412 ஊதியமாக வழங்க ஆட்சியா் உத்தரவிட்டாா். ஆனால், தனியாா் நிறுவனம், ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.385 ஐ மட்டுமே வழங்கி வருகிறது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளா் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் துப்புரவுப் பணியாளா்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே துப்புரவுப் பணியாளா்களுக்கான ஊதிய உயா்வு பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியா் நேரடியாகத் தலையிட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.