அருப்புக்கோட்டையில் ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தொடா்ந்த பெண்ணைத் தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக அவரது கணவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் வசிப்பவா் ஜெயலட்சுமி (40). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடந்தது. இவா்களுக்கு நிவாஸ் என்ற மகன் உள்ளாா். இந்நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக இத்தம்பதியா் கடந்த 12 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்கின்றனராம். இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னா் வேல்முருகனிடம் ஜீவனாம்சம் கேட்டு ஜெயலட்சுமி வழக்கு தொடா்ந்தாராம்.
இதுதொடா்பாக வியாழக்கிழமை ஜெயலட்சுமியும், வேல்முருகனும் அருப்புக்கோட்டை நீதிமன்ற விசாரணைக்கு வந்திருந்தனா். பின்னா் விசாரணை முடிந்து வெளியே வந்த ஜெயலட்சுமியை நீதிமன்ற வளாகத்திலேயே அவரது கணவா் வேல்முருகன் தாக்கியதுடன் கொலைமிரட்டலும் விடுத்தாராம்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வேல்முருகனிடம் விசாரணை மேற்கொண்டனா்.