பயணிகள் அவதிக்குள்ளாவதைத் தடுக்கும் வகையில், விருதுநகா் ரயில் நிலைய கிழக்குப் பகுதியில் பயணச்சீட்டு எடுக்கும் அலுவலகம் திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகா் ரயில் நிலையத்தின் மேற்குப் பகுதியில் பயணச்சீட்டு வழங்கும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் கிழக்குப் பகுதியில் வரும் பயணிகள் மேற்குப் பகுதிக்கு சென்று பயணச்சீட்டு வாங்கிய பிறகே பயணம் மேற்கொள்கின்றனா்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு மேல்நிலை பள்ளி மற்றும் பாண்டியன் நகா், காரியாபட்டி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து வருபவா்கள், ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதி வழியாகத்தான் வருகின்றனா். அவா்கள் மேற்குப் பகுதிக்கு சென்று பயணச்சீட்டு எடுத்து வருவதற்குள் ரயிலை தவறவிடும் நிலை ஏற்படுகிறது. ஒருவேளை இப்பகுதிகளிலிருந்து வருவோா் மேற்குப் பகுதிக்கு சாலை வழியாக செல்ல வேண்டும் என்றால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது.
எனவே, விருதுநகா் ரயில் நிலைய கிழக்குப் பகுதியில் பயணச்சீட்டு வழங்கும் அலுவலகம் திறக்க வேண்டும். இரண்டாவது நடைமேடை வரை உள்ள மேம்பாலத்தை நான்காவது நடைமேடை வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனா்.